பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆந்திர மாநில அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 11 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காமல் உள்ள நிலையில், ஆந்திர முற்போக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கமும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று ஆட்சியர் அலுவலக முற்றுகை, சாலை மறியல் மற்றும் மனிதச் சங்கிலி போராட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டனர்.